தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை!

பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை!

Admin 13 Jul 2026 | 08:20 PM
பகிர்:

80 ஆண்டுகளுக்கு முன் கல்வீச்சை எதிர்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட உரையாற்றிய தந்தை பெரியார்!

அந்த வரலாற்றை நினைவுகூர்ந்த சின்னாளப்பட்டி மாநாட்டில் "பெரியார் உலகம்" கட்டுமானத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை!

மதுரை மாவட்டமாக இருந்த (தற்போதைய திண்டுக்கல் மாவட்டம்) சின்னாளப்பட்டியில், 1946 ஜனவரி 16 அன்று தந்தை பெரியார் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கல்வீச்சுத் தாக்குதல், திராவிட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வரலாற்றுச் சம்பவத்தின் 80-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், கடந்த ஜூன் 26 அன்று சின்னாளப்பட்டியில் "எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – 80-ஆவது ஆண்டு விழா" என்ற தலைப்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.


இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் போது, திராவிடர் கழக பழனி மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி. ஆனந்த கிருஷ்ணன் அவர்கள், திருச்சி சிறுகனூரில் அமைக்கப்பட்டு வரும் "பெரியார் உலகம்" திட்டத்திற்காக ரூ.1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) நன்கொடையை ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

1946 ஜனவரி 16 – சின்னாளப்பட்டியை உலுக்கிய வரலாற்று நாள்.

1946 ஜனவரி 16 அன்று சின்னாளப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் குறித்து 19.01.1946-ஆம் தேதி வெளியான குடிஅரசு இதழ் விரிவாக பதிவு செய்துள்ளது.

அதன்படி, தந்தை பெரியார் மகிழுந்தில் ஊர்வலமாக நகருக்குள் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்காலத்தில் புதுமையாகக் கருதப்பட்ட ஒலிபெருக்கி வசதியுடன் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பெரியாரின் உரையைக் கவனமாகக் கேட்டனர்.


இதைக் கண்ட சில எதிர்ப்பாளர்கள் தூரத்தில் இருந்து கூச்சலிட்டு கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால், பெரியார் எவ்வித அச்சமும் இன்றி தனது உரையைத் தொடர்ந்தார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசத் தொடங்கினர்.

அந்த நேரத்தில் தந்தை பெரியார் தனது சால்வையை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு,

"எல்லோரும் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள்; ஒருவரும் கலைய வேண்டாம்!"

என்று மக்களைத் தைரியப்படுத்திவிட்டு, தொடர்ந்து உரையாற்றினார்.

இதையடுத்து கல்வீச்சு மேலும் தீவிரமடைந்தது. கற்கள் மழைபோல் வீசப்பட்டன. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளர், கூட்டத்தைக் கலைக்குமாறு பெரியாரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பெரியார்,

"என்னால் சமாளிக்க முடியவில்லை; கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள்."

என்று உறுதியாகக் கூறிவிட்டு மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார்.

பின்னர் காவல் உதவி ஆய்வாளர் ஒலிபெருக்கி மூலம், பாதுகாப்பு வசதி போதிய அளவில் இல்லாததால் கூட்டம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். உள்ளூர் தோழர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே பெரியார் தனது உரையை நிறைவு செய்தார்.

கல்வீச்சும் கலவரமும் நடைபெற்ற அந்தச் சூழலிலும், தந்தை பெரியார் சுமார் ஒரு மணி நேரம் மேடையில் நின்று உரையாற்றியதாக குடிஅரசு பதிவு செய்கிறது. மேலும், முஸ்லிம் லீக் மற்றும் சித்தையன்கோட்டை திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்திதழ்களும் மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"பெரியார் உலகம்" – சிந்தனையை நிலைநிறுத்தும் நினைவுச்சின்னம்'

இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் மாநாட்டில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் நன்கொடை, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் உருவாகி வரும் "பெரியார் உலகம்" திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை, சிந்தனை, சமூகநீதி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாக்கப்படும் இந்த வளாகத்தில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள்:

  • 155 அடி உயர தந்தை பெரியார் சிலை (60 அடி பீடத்துடன்)
  • நவீன நூலகம்
  • ஆராய்ச்சி மையம்
  • கோளரங்கம் (Planetarium)
  •  திராவிட இயக்கத் தலைவர்களின் மெழுகுச் சிலை அருங்காட்சியகம்
  •  கல்வி மற்றும் கண்காட்சி மையங்கள்

80 ஆண்டுகளுக்கு முன்பு கல்வீச்சையும் கலவரத்தையும் அஞ்சாமல் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் நிகழ்வில், அவரது சிந்தனைகளை நிலைநிறுத்தும் "பெரியார் உலகம்" திட்டத்திற்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடை, வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு குறியீட்டு நிகழ்வாக அமைந்தது.

குறிச்சொற்கள்

அரசியல் தமிழ்நாடு PVP Anandhakrishnan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண