சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 300 வீடுகள் கட்டித்தரும் மிகப்பெரிய சமூகநலத் திட்டத்தை முன்னெடுத்து வரும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த தலைவரும், தொழிலதிபருமான Rtn. சி.முத்துசாமி அவர்கள், இதுவரை ரூ.5 கோடி மதிப்பில் 100 வீடுகள் கட்டும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.முத்துசாமி அவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரோட்டரி இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், ஈச்சனாரி ஊர் நாயக்கரான சி.முத்துசாமி, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை போர்ட் சிட்டியின் நிறுவனர்களில் ஒருவர்.அக்கிளப்பின் தலைவராகவும் பணியாற்றியதுடன் பல முக்கியத் திட்டங்களுக்கு தலைமையேற்று வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.
தற்போது ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234 சார்பில் செயல்படுத்தப்படும் "Happy Shelter" திட்டத்தின் மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசிக்கும் இருளர் சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு மொத்தம் 300 வீடுகள் கட்டித்தரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025–2026ஆம் ஆண்டிற்கான முதற்கட்டத் திட்டமாக 100 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 2 சென்ட் நிலத்தில், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் 385 சதுர அடி பரப்பளவில் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை, கழிப்பறை மற்றும் முற்றம் ஆகிய வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் திட்ட இயக்குநராக சி.முத்துசாமி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
அரசாங்கத்தின் எந்தவித நிதி உதவியும் இல்லாமல், முழுக்க முழுக்க ரோட்டரி கிளப்புகள் மற்றும் தனிநபர் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி திரட்ட வேண்டிய சவாலை முத்துசாமி அவர்களின் தலைமையிலான குழு வெற்றிகரமாக எதிர்கொண்டது.
இதன் விளைவாக, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் 40 வீடுகள், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் 13 வீடுகள், சேந்தமங்கலத்தில் 20 வீடுகள் மற்றும் சென்னையில் 7 வீடுகள் என மொத்தம் 80 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 வீடுகளும் இம்மாத இறுதிக்குள் பயனாளிகளிடம் வழங்கப்பட உள்ளன.
சமூகநலத் துறையில் மிகப்பெரிய சவாலாகக் கருதப்பட்ட இந்த வீட்டுவசதி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக சி.முத்துசாமி அவர்கள் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், "Rotary Icon 2025–2026" விருது அவருக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்ட ஆளுநர் வினோத் சரோஜி அவர்கள் இவ்விருதை வழங்கி அவரை கௌரவித்தார்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இந்த மகத்தான முயற்சி, சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தனிநபர்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்தால் எத்தகைய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.