வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு வழங்கும் 8/2021 சிறப்பு சட்டத்தை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பிலிருந்து மீண்டும் சிறப்பு சட்டத்தை இயற்றக்கோரி தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதனையடுத்து கடந்த 14.04.2022 அன்று தலைமைச்செயலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டவல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சாதிவாரி புள்ளிவிபரங்களை திரட்டிய பின்னரே அனைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சாதியினர் மதுரையில் கடந்த ஆறாம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.
அரசுக்கு இதுகுறித்து வலியுறுத்துவதற்காக சமூகநீதி கூட்டமைப்பினர் செனையில் முகாமிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களையும் ,அமைச்சர்களையும் சந்தித்து மனு அளித்து வருகின்றனர். தமிழக அரசு இன்னும் தீர்க்கமான முடிவை அறிவிக்காத காரணத்தால், அடுத்தகட்டமாக வரும் 22-ஆம் தேதி சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மிகுந்த எழுச்சியுடன் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள 5-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாளை இரவு நாமக்கல்லில் இருந்து புறப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை மற்றும் விடுதலைக்களம் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாமக்கல்லில் ஏற்பட்ட எழுச்சி பிற மாவட்டங்களிலும் பரவினால் இடஒதுக்கீட்டை காப்பது உறுதி.