விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் ஊராட்சிமன்ற மு.தலைவர் திரு.பி.வெங்கட்டராஜுலு திடீர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் (17.11.2025) திங்களன்று இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு,
விருதுநகர் மாவட்டம் வி.சுந்தரலிங்கபுரம் (கருப்பம்பட்டி) கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் 55 வயதுடைய திரு.பி.வெங்கட்டராஜுலு. கால்நூற்றாண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்கழகச் செயலாளராக இருந்துவந்த வெங்கட்டராஜுலு, கடந்த 2019 ஆம் ஆண்டு வள்ளியூர் ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர், 2025 ஜனவரி மாதம் வரை ஐந்தாண்டுகள் அப்பொறுப்பில் சிறப்பாகப்பணியாற்றினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (17.11.2025) மாலை வெங்கட்டராஜுலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்படவே குடும்பத்தினர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றனர். எனினும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பாகவே உயிர் பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
வள்ளியூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வெங்கட்டராஜுலுவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாகவும், வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரை சமுதாயம் இழந்துவிட்டது. அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக தனது இரங்கல் செய்தியில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.