Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி அமைச்சருடன் சந்திப்பு!

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக்கோரி அமைச்சருடன் சந்திப்பு!

பகிர்:

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க வளாகம் அமைந்துள்ள வீரபாண்டி நகரில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தக்கோரி சங்க நிர்வாகிகள் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இதன் விவரம் பின்வருமாறு,

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமி கட்டடம் சென்னையின் புறநகர் பகுதியான செங்குன்றத்தில் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் அருகிலுள்ள வீரபாண்டி நகரில் அமைந்துள்ளது. வெளிவட்ட சாலையின் இருபுறமும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மனைகள் இந்நகரில் உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சட்டங்கள் முறையாக வகுக்கப்படாத 1990-களில்  உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி என்பதால், உள்ளூர் கிராம ஊராட்சியின் அனுமதி பெற்று சுமார் 300-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் வீடுகட்டி குடியமர்ந்துள்ளனர். தற்போது செங்குன்றம் பகுதி விரிவடைந்து நகரமயமாகி வரும் நிலையில். வீரபாண்டி நகர் நகரில் குடியேருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நகரின் இருபுறங்களில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் உட்புற சாலைகள் மண் சாலைகளாகவே இருந்துவருகிறது. 

தங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி வீரபாண்டி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்  ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறையிட்டும், கிராம சபைகளில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித முன்னேற்றமுமின்றி தவித்து வருகின்றனர். இந்தாண்டு சென்னை நகரில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக இந்நகரின் அருகிலுள்ள புழல் ஏரி இப்போதே முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. வடகிழக்குப்பருவ மழையின் அளவே இங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் மழையால் வீரபாண்டி நகர் வெள்ளக்காடாக மாறும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் உட்புற சாலைகளில் தேங்கும் மழைநீரால் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருக்கும். தற்போது கிராம ஊராட்சித் தலைவர்களின் பதவிகாலம் முடிவடைந்து தனி அலுவலர் கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் அரசு நிர்வாகத்தை அணுகமுடியாத நிலையில் உள்ளனர்.

இப்பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உதவுமாறு வீரபாண்டி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்  நமது சங்கத்தை அணுகினர். இதனையடுத்து சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.பெருமாள் அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று (21.08.2025) காலை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐ.பெரியசாமி அவர்களை சென்னையிலுள்ள அவரது முகாம் இல்லத்தில் சந்தித்து வீரபாண்டி நகரில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்துதருமாறு மனு அளித்தனர்.

நிர்வாகிகளிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய ஆவண செய்வதாக வாக்குறுதியளித்தார். இச்சந்திப்பின்போது ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன், மண்டலப்பொறுப்பாளர் ஆர்.ஆறுமுகச்சாமி, ஆர்.காளிமுத்து, ஜாபர்கான்பேட் ஆர்.செந்தில்குமார், ராம்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அமைச்சருடன் சங்க நிர்வாகிகள் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், மு.ஊராட்சி மன்றத் தலைவர்கள் செய்திருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Periyasamy thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண