இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக விளங்கியவர் மறைந்த சீனிகுருசாமி. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், எழுமலை அருகேயுள்ள நாகமநாயக்கன்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட சீனுகுருசாமி அவர்கள், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருந்த ஒருசில பட்டதாரிகளில் ஒருவர். தலைமைச் செயலகத்தில் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தலைமைச் செயலக அதிகாரியாக சீனிகுருசாமி பணியாற்றியபோது, திருவல்லிக்கேணியில் இவர் தங்கியிருந்த அறை, வேலைவாய்ப்பு தேடி சென்னை வரும் தென்மாவட்ட இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நல்வாழ்வளித்தவர் என்றால் மிகையல்ல. மேலும், இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முக்கிய ஆலோசகராக இருந்து சமுதாயத்திற்கும், அரசுக்கும் பெரும் பாலமாக விளங்கினார். அரசின் பல சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை சமுதாய மக்களிடம் கொண்டுசேர்ப்பதிலும், பெற்றுத்தருவதிலும் முக்கியப்பங்காற்றியுள்ளார்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் சமுதாய மக்கள் மத்தியில் நன்கறியப்பட்டவரான சீனிகுருசாமி அவர்களின் மகன்களில் ஒருவர் எஸ்.ஜி.இராமசாமி. தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கூடுதல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருந்தபோது ஓய்வு பெற்றார். மறைந்த எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாகவும், உளவுத்துறை அதிகாரியாகவும் சிறப்பாகப் பணியாற்றி உயரதிகாரிகளால் பாராட்டப்பெற்றவர் இராமசாமி. காவல்துறையில் நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர்போன இராமசாமி அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நல்லமநாயுடு தலைமையிலான குழுவில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் காவல்துறையில் பணியாற்றிய காலங்களில் சாதிக்கலவரங்களின்போது அப்பாவி இளைஞர்கள் மீது புனையப்படும் பொய்வழக்குகளில் இருந்து பாதுகாத்து, விரைவில் அப்பகுதியை இயல்புநிலைக்குக்கொண்டுவருவதில் கெட்டிக்காரர். தமிழகத்தில் கள்ளச்சாரயம் பெருக்கெடுத்தோடிய 80-களில், இன்று அரசியலில் சாராய வியாபாரப் பின்னனியோடு வலம் வரும் பல முக்கியப்பிரமுகர்களை கைது செய்து சிறையிலடைத்தவர். தவிர, சட்டம் ஒழுங்கை சரிவர பராமறிக்கத்தவறிய மாவட்ட கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசு, அவருக்குக்கீழ் பணியாற்றிவந்த ஐபிஎஸ் அல்லாத இராமசாமி அவர்களை பொறுப்பு கண்காணிப்பாளராக நியமித்து சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கும் அளவிற்கு அரசும், அதிகாரிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியக்குடும்பப்பின்னனியும், செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்றும் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்துவந்த இராமசாமி அவர்கள், பணி ஓவ்விற்குப்பிறகு சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தோற்றுவிப்பதிலும், கட்டபொம்மன் அகாடமியை உருவாக்கியதிலும் மிகமுக்கியப்பங்காற்றியுள்ள இராமசாமி அவர்கள். சங்கத்திற்காக பல லட்சங்களை நன்கொடையாக வழங்கியும், பெற்றும் கொடுத்துள்ளார். கட்டடப்பணியின்போது சங்கம் நிதிநெருக்கடியில் சீகும்போதெல்லாம் மீட்பராக வந்து உதவியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக உடல்நலிவுற்ற நிலையிலும் சங்கத்திற்காக அரும்பங்காற்றியுள்ள இராமசாமி அவர்கள், கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு சுமார் 9.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிழந்தார். இராமசாமி அவர்களின் பூத உடல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக முகப்பேரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை (18.02.2025) நண்பகல் 1 மணியளவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, வில்லிவாக்கம் மின்மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இராமசாமி அவர்களுக்கு ஜெயராணி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இருவர் அமெரிக்காவில் நிரந்தரக்குடியுரிமை பெற்று வசித்துவரும் நிலையில், தந்தையாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இருவரும் வந்துகொண்டுள்ளனர்.